“எங்கள் பகுதி இனி...” - சரளமாக ஆங்கிலத்தில் அசத்திய அரசு பள்ளி +2 சாதனை மாணவி!
மாநகராட்சி பள்ளியில் பயின்று, +2 தேர்வில் 578 மதிப்பெண்கள் எடுத்து அசத்திய பூங்கோதை எனும் மாணவி, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக ஷேராகி வருகிறது.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி படித்தால் மட்டுமே பிள்ளைகளுக்கு நல்ல ஆங்கிலப் புலமை வளரும், அதிக மதிப்பெண்கள் எடுத்து உயர் கல்விக்கு நல்ல கல்லூரிகளுக்குச் செல்வார்கள் என்ற பிம்பங்களை எல்லாம் சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்கள் உடைத்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிகரான ஆசிரியர்கள் இங்கேயும் இருக்கிறார்கள், நாங்களும் அம்மாணவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு முடிவுகளில் அவர்கள் உரக்கக் கூறி வருகிறார்கள். இந்த ஆண்டும் அப்படித்தான்!
பிளஸ் டூ பொதுத் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் நல்ல சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், சென்னை பெரம்பூரை சேர்ந்த மாநகராட்சி பள்ளியில் பயின்ற பூங்கோதை என்ற மாணவி 578 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியிருக்கிறார். கூடவே, அம்மாணவி ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வேகமாக ஷேராகி வருகிறது.
மாணவிகளே அதிகம்: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து 94.56 சதவீதம் ஆக உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 7,60,606 மாணவ, மாணவிகளில் இம்முறை 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.
அசத்தல் ஆங்கிலப் பேட்டி: மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண்ணை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்த மாணவி பூங்கோதை பெற்றுள்ளார். இந்த மாணவி 600-க்கு 578 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியிலும் முதல் மாணவியாக வந்து அசத்தியிருக்கிறார்
இவர் ஆங்கிலத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அவரது ஆங்கிலப் புலமை இருப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
பூங்கோதையின் தந்தை ஆட்டோ டிரைவர் ஆவார். அவர் ஒருநாள் ஆட்டோ ஓட்டப் போகவில்லை என்றால்கூட, அன்றைய தினம் அவர்களது குடும்பச் செலவு கேள்விக்குறியாகி விடும். ஒரே ஒரு அறை கொண்ட வாடகை வீட்டில் வசித்து வருகிறது பூங்கோதையின் குடும்பம்.
பூங்கோதையின் சகோதரி பி.பார்ம் படித்து வருகிறார். சகோதரிகள் இருவருக்கும் படிப்பதற்கென தனி அறையோ அல்லது வேறு எந்த வசதிகளும்கூட இல்லாத நிலையில், இருவருமே கல்வியில் தங்களது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.
தனது இந்த வெற்றி குறித்து பூங்கோதை ஆங்கிலத்தில் அளித்துள்ள பேட்டியில், “எனது பெற்றோர் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கும்போது, அதன் விலையை பார்த்து வாங்காத சூழல் உருவாகும் அளவிற்கு என் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். அதுதான் எனது ஆசை. அதற்காகத்தான் நான் கடுமையாக உழைத்து வருகிறேன். மேலும் உழைப்பேன்.
நான் நல்ல மதிப்பெண்கள் பெற எனது பெற்றோர், சகோதரி, பள்ளி ஆசிரியர், ஆசிரியை மற்றும் நண்பர்கள் பெரும் பக்கபலமாக இருந்தனர். பி.காம் படிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பின்னர் சிஏ படிக்க விருப்பப்படுகிறேன்” என பூங்கோதை கூறியிருக்கிறார்.
மேலும், தான் சார்ந்து இருக்கும் கொடுங்கையூர் பகுதி குழந்தைகள் உயர் கல்வி நோக்கி நகர வேண்டும் என்றும் பூங்கோதை விருப்பம் தெரிவித்துள்ளார்.
பூங்கோதையின் இந்தப் பேட்டி வீடியோ சமூக வலைதளப் பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவரது அசத்தலான ஆங்கில அறிவைப் பார்த்து மக்கள் அசந்துபோயுள்ளனர். இதற்காக அவருக்கும், அவரை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.