அலெக்ஸா ‘வாயிலாக’ குழந்தையை காத்த சிறுமிக்கு ஆனந்த் மஹிந்திரா தந்த சர்ப்ரைஸ்!
அலெக்ஸாவை நாய் போல் குரைக்க வைத்து, குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்த சிறுமியை பாராட்டியதுடன், எதிர்கால ஜாப் ஆஃபரையும் தந்திருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.
அலெக்ஸாவை அட்டகாசமாக பயன்படுத்தி குழந்தை ஒன்றைக் காத்த 13 வயது சிறுமியை பாராட்டியதுடன், அவருக்கு எதிர்காலத்துக்கான ஜாப் ஆஃபரையும் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் வழங்க முன்வந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
வீட்டுக்குள் நுழைந்த குரங்குகளிடம் இருந்து தனது உறவினர் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக, அலெக்ஸாவை நாய் போல் குரைக்க வைத்து, அனைத்து குரங்குகளையும் விரட்டிய அந்தச் சிறுமி நிகிதாவின் புத்திசாலித்தனமான செயலை ஆனந்த் மஹிந்த்ரா மட்டுமின்றி நெட்டிசன்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வியாழனன்று நடந்த சம்பவத்தில் உத்தரப் பிரதேச பாஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த பங்கஜ் ஓஜா தன் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளியை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு கொண்டு விடச் சென்றபோது தெரியாமல் வீட்டின் முன் கதவைத் திறந்தே வைத்து விட்டுச் சென்று விட்டார். அப்போது, வீட்டுக்குள் குரங்குகள் நுழைந்ததோடு அல்லாமல் பெரிய அமளிதுமளியில் ஈடுபட்டன. வரவேற்பறையை துவம்சம் செய்து பிறகு சமையலறைக்குள் தன் கைவரிசையைக் காட்டச் சென்றன.
அப்போது உறவுக்கார சிறுமி நிகிதாவும், ஓஜாவின் 15 மாதமேயான மகள் வாமிகாவும் படுக்கையறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். குரங்குகள் இருவரையும் நோக்கி வந்ததால் அரண்டு போயினர். உடனே சிறுமி நிகிதா ஃபிரிட்ஜ் அருகே இருந்த அலெக்ஸாவைக் கவனித்தார். அலெக்ஸா என்பது மெய்நிகர் உதவிக்கருவி ஆகும். உடனேயே சமயோசிதமாக அலெக்ஸாவை நோக்கி நாய் போல் குரைக்கக் கட்டளையிட்டார். உடனேயே அலெக்ஸாவும் நாய் போல் குரைக்க, அரண்டு மிரண்டு போன குரங்ககள் பால்கனி வழியே கிரேட் எஸ்கேப் என்று ஓடி விட்டன.
இது தொடர்பாக நிகிதா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியபோது, “விருந்தாளிகள் வந்து விட்டுச் சென்றனர். ஆனால் செல்லும்போது கேட்டை திறந்து வைத்து விட்டுச் சென்றனர். குரங்குகள் சமையலறையின் நுழைந்து பாத்திரங்களைப் பந்தாடின. 15 மாதக் குழந்தை பயத்தில் அழத் தொடங்கியது. அப்போதுதான் அலெக்ஸா இருந்ததைக் கண்ட நான், அலெக்ஸாவிடம் நாய் போல் குரை என்றேன். அந்தக் குரைப்புச் சப்தம் கேட்டவுடன் பயந்து போன குரங்குகள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட்டன” என்றார்.
சம்பவ நாயகி நிகிதா குறித்து அவரது தாயார் கூறும்போது, “நிகிதாவின் சமயோசித விரைவு யோசனையினால் குரங்குகளின் தாக்குதலிலிருந்து குழந்தைத் தப்பியது. அலெக்ஸாவை நல்ல முறையில் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினாள்” என்றார்.
இத்தகைய உடனடி, சமயோசித, புத்திசாலித்தனத்தைப் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில், “நம் காலக்கட்டத்தின் பெரிய கேள்வி என்னவெனில், மனித குலம் தொழில்நுட்பத்தின் அடிமையா ஆண்டானா என்பதுதான். ஆனால் இந்தச் சிறுமி நிகிதா தன் புத்திகூர்மையினால் தொழ்ல்நுட்பத்தை மிகத் துல்லியமாக, சரியான தருணத்தில் பயன்படுத்த முடியும் என்று காட்டியுள்ளார். அவரது விரைவு கதி சிந்தனை அசாதாரணமானது.
முற்றிலும் கணிக்க முடியாத இவ்வுலகில் நிகிதா காட்டியிருக்கும் இந்தத் திறமை தலைமைத்துவப் பண்புகளுக்குரியது. நிகிதா தன் கல்வியை முடித்து விடும்போது அவர் விருப்பப்பட்டால் கார்ப்பரேட் உலகில் பணியாற்ற விருப்பம் கொண்டால், அவரை எங்கள் நிறுவனத்தில் பணியில் சேர அழைக்கிறோம். அவரை நாங்கள் திருப்தி செய்ய முடியும் என்று நம்புகிறேன்” என்று பெருமை பொங்கக் கூறியுள்ளார்.
அலெக்ஸா என்ற பயன்பாடு அமேசானால் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது கிளவுட் அடிப்படையிலான குரல் உதவி அமைப்பாகும். இதன் மூலம் நம் டைமர் செட் செய்வது, கேள்விகளைக் கேட்பது, இசை ஆல்பங்களை இயக்குவது என்று நம் அன்றாடப் பணிகளைக் கவனித்துக்கொள்ளும் ஒரு தொழில்நுட்ப அதிசய பயன்பாடாகும்.