2 ஆண்டில் 14 கடைகள்: ‘Chaiwaale' ப்ராண்ட் நிறுவிய 26 வயது தொழில் முனைவர்!
Chai Waale சமீபத்தில் 1.75 கோடி ரூபாய் நிதி உயர்த்தி, தொடங்கிய 24 மாதங்களிலேயே விரைவாக வளர்ச்சியடைந்து, இன்று 14 அவுட்லெட்களுடன் செயல்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் Chai Waale. 2018-ம் ஆண்டு சுயநிதியில் தொடங்கப்பட்ட இதன் நிறுவனர் விதுர் மகேஸ்வரி. 2015-ம் ஆண்டு யூகே-வின் கிங்ஸ் கல்லூரியில் வணிக மேலாண்மை பிரிவில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை விதுர் முடித்துள்ளார்.
2017-ம் ஆண்டு இவருக்கு Chai Waale உருவாக்கும் எண்ணம் தோன்றியது. இதற்கு முன்பு இந்திய சந்தை பற்றி ஆராய்ந்து, அது குறித்து பணியாற்றி வந்தார். அத்துடன் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக பங்குச் சந்தையிலும் கவனம் செலுத்தி வந்தார். உணவு மற்றும் பானங்கள் பிரிவில் ஆர்வம் அதிகமிருந்ததால் 2018-ம் ஆண்டு ‘சாய்வாலே’ ‘Chai Waale’ நிறுவினார்.
வணிக மாதிரி மற்றும் வாய்ப்புகள்
கடந்த இரண்டாண்டுகளாகவே சூடான பானங்கள் சந்தை வளர்ச்சியடைந்து வருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் சாலையோர தேநீர் கடைகளையே மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர், அல்லது சிறந்த சூழலுடன் கூடிய விலை அதிக கஃபே-க்களை நாடுகின்றனர்.
இவை தவிர, ஃப்ரெஷ்ஷான பானங்களை சிறந்த விலையில் வழங்கும் துரித உணவகங்களின் வருகையும் சந்தை வளர்ச்சிக்குக் காரணமாகும் என்பதை விதுர் புரிந்து கொண்டதால் ‘சாய்வாலே’-க்கு மக்களிடம் வரவேற்பு தொடங்கியது.
துரித உணவகங்களின் சமையலறை, தொழில்முறை ஊழியர்களுடன் இயங்குகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதகமான அம்சமாகும். இதனால் இந்த வணிக மாதிரி கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்கிறார் விதுர்.
நேரடி ஸ்டோர் அனுபவம் மட்டுமல்லாது ஆன்லைன் தேவையும் நிலவுவதால் துரித உணவகங்கள் பிரிவில் இரண்டு வகைகளிலும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக கூறுகிறார்.
Chai Waale இவ்விரண்டிலும் முறையாக கவனம் செலுத்தி சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது. Chai Waale ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் விற்பனையின் பங்களிப்பு 60:40 என்கிற விகிதத்தில் அமைந்துள்ளது. சென்னையில் சரியான இடங்களைத் தேர்வு செய்து அவுட்லெட்கள் திறந்து சிறந்த விலையில் தேநீர் விற்பனை செய்து வருகிறது சாய்வாலே.
வருவாய் மற்றும் நிதி
Chai Waale சமீபத்தில் 1.75 கோடி ரூபாய் நிதி உயர்த்தியுள்ளது. தொடங்கிய 24 மாதங்களிலேயே விரைவாக வளர்ச்சியடைந்து, இன்று சென்னையில் 14 அவுட்லெட்களுடன் செயல்படுகிறது. துரித உணவகங்கள் பிரிவில் (QSR) மேலும் 5 அவுட்லெட்டுகளை விரைவில் திறக்க உள்ளது.
Chai Waale அனைத்து அவுட்லெட்கள் மூலமாகவும் 2019ம் ஆண்டில் 63 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 2020ம் ஆண்டு 5 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் விதுர் மகேஸ்வரி.
“ஒவ்வொரு அவுட்லெட்டிலும் நாள் ஒன்றிற்கு சராசரியாக 1300-1500 கப் தேநீர் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர ஸ்நாக்ஸ் வகைகள் விற்பனையாவதாக தெரிவிக்கிறார்.
ஸ்டோர்களைப் பொறுத்தவரை லாபகரமாக செயல்பட்டு வருகின்றன. முக்கியக் குழு உறுப்பினர்களின் ஆதரவே இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளது. விரிவாக்கப் பணிகளுக்கும் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதற்கும் நிதி பயன்படுத்தப்படும், என்கிறார் விதுர்.
தனித்துவமான செயல்பாடுகள்
சென்னை மற்றும் இதர நகரங்களில் பல்வேறு தேநீர் பிராண்டுகள் அறிமுகமானாலும் Chai waale நிறுவனர் அதை போட்டியாகக் கருதவில்லை. இதை சாதகமான அம்சமாகவே கருதுகிறார்.
“உலக அளவில் ஒப்பிடும்போது தேநீர் குடிப்போர் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இருப்பினும் பல காலமாகவே இந்தப் பிரிவு ஒழுங்குப்படுத்தப்படாமல் இருந்து வரும் நிலையில் இந்தப் பிரிவில் பலரும் செயல்பட்டால் முறையாக ஒழுங்குபடுத்தப்பட வாய்ப்புள்ளது,” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் விதுர்.
கீழ்கண்ட நான்கு அடிப்படை அம்சங்களே தங்களது செயல்பாடுகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதாக நிறுவனர் தெரிவிக்கிறார்:
1. வாடிக்கையாளர்கள் – வாடிக்கையாளர்களே ஒரு வணிகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்களிக்கின்றனர். அவர்களால் பிராண்டிற்கு நற்பெயர் கிடைக்கும்.
2. நிர்வாகம் மற்றும் ஸ்டோர்களில் உள்ள குழு உறுப்பினர்கள் – வளர்ச்சிப் பயணத்தில் இவர்கள் முக்கிய பார்ட்னர்களாக கருதப்படுகின்றனர்.
3. விற்பனையாளர்கள் – இவர்கள் Chai Waale விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்களிப்பதுடன் அன்றாட செயல்பாடுகள் தடையின்றி மேற்கொள்ளப்பட உதவுகின்றனர்.
4. முதலீட்டாளர்கள் – இவர்களது ஆதரவு மற்றும் ஊக்கத்தினால் மட்டுமே Chai Waale விரிவடைந்தது. Chai Waale நிர்ணயித்த வெற்றி இலக்கு எட்டப்பட இவர்களே காரணம்.
ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்புகள்
ஊரடங்கு நிச்சயம் இவர்களது விற்பனையை பாதித்துள்ளது. வருவாய் இல்லாத காரணத்தால் செலவுகளைக் குறைக்கவும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களும் அவுட்லெட்களை மூடிவிட்டனர்.
“முக்கிய உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்வதில் முதலீடு செய்தோம். இதை நான் நஷ்டம் என்று கருதவில்லை. இது நமக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் அல்ல. இது உலகளாவிய நெருக்கடி,” என்கிறார் விதுர்.
ஜூன் மாதம் முதல் அவுட்லெட்கள் செயல்படத் தொடங்கியுள்ளது. அப்போதிருந்து விற்பனை அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இவர்களது மெனுவில் புதிய வகைகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.
“வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் வசதியாக பயன்படுத்தும் வகையில் 200 மி.லி பிளாஸ்க் அறிமுகப்படுத்துகிறோம். இது தவிர நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய தேநீர் வகைகளையும், அதேபோல் கூடுதல் ஸ்நாக்ஸ் வகைகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம்,” என்றார் விதுர்.
கோவிட்-19 பரவுவதற்கு முன்பிருந்த வருவாய் அளவை விரைவில் எட்டவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளனர். 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் 40-45 அவுட்லெட்களுடன் செயல்பட Chai Waale திட்டமிட்டுள்ளது.