'இன்று பெண்கள் தங்கள் முதல் அடியை வைக்கலாம்’ - உலகின் இளம் பெண் பில்லியனர் விட்னி வோல்ஃப் ஹெர்ட்!
பம்பிள் நிறுவனம் பொது நிறுவனமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதன் நிறுவனர் விட்னி வோல்ஃப் ஹெர்ட் பங்குகளின் மதிப்பு 1.5 பில்லியன் டாலராக உயர்ந்து இளம் வயதில் பில்லியனர் பட்டியலில் நுழைந்துள்ளார்.
“பெண்கள் முதலில் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பம்பிள் (Bumble) நிறுவனர் மற்றும் சிஇஓ விட்னி வோல்ஃப் ஹெர்ட்.
பம்பிள் நிறுவனத்தின் பங்குகள் நாஸ்டாக்கில் 72 அமெரிக்க டாலருடன் 67 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது.
இதன் மூலம் விட்னியின் பங்குகளின் மதிப்பு 1.5 பில்லியன் டாலராக உயர்ந்து இளம் வயதில் பில்லியனர் பட்டியலில் நுழைந்துள்ளார்.
“பம்பிள் நிறுவனம் பொது நிறுவனமாக மாறியுள்ளது. எங்கள் செயலியைப் பயன்படுத்திய 1.7 பில்லியன் பெண்களால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. இவர்களே எங்களை வணிகப் பாதையில் வெற்றி நடைபோட்டு பயணிக்க வைத்துள்ளார்கள். இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி,” என விட்னி பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 12 மாதங்களில் பொது நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ள 559 நிறுவனங்களில் Bumble தவிர மற்றுமொறு நிறுவனம் மட்டுமே ஒரு பெண்ணால் நிறுவப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
31 வயதான விட்னி 2014-ம் ஆண்டு பம்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு முன்பு டிண்டர் நிறுவனத்தில் இணை நிறுவனராக பொறுப்பேற்றிருந்தார்.
பிரியங்கா சோப்ரா ஆதரவுடன் செயல்படும் பம்பிள் நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்ட சமயத்தில் பம்பிள் வெறும் டேட்டிங் செயலி அல்ல என்றும் டிண்டர் செயலி இதன் போட்டியாளர் அல்ல என்றும் யுவர்ஸ்டோரி இடம் தெரிவித்திருந்தார் விட்னி.
மேலும் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சமூக இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தளம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பம்பிள் செயலியில் பெண்கள் முதலில் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். இந்தச் செயலி 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர் எண்ணிக்கையை எட்டியுள்ளது. பம்பிள் நிறுவனத்திற்கு டிண்டர் போட்டியல்ல என்று குறிப்பிடும் விட்னி,
“எங்களுடையது வெறும் டேட்டிங் செயலி அல்ல. டேட்டிங், நண்பர்களைக் கண்டறிதல், வணிக ரீதியான ஒருங்கிணைப்பு என மூன்று வெவ்வேறு பிரிவுகளில் எங்கள் ஆப் கவனம் செலுத்துகிறது. தேவைப்பட்டால் எங்கள் பயனர் டேட்டிங் என்கிற ஆப்ஷனை நீக்கிவிடலாம். டேட்டிங் அல்லாத செயலியாக மாற்றிக்கொள்ளலாம்,” என்றார்.
பம்பிள் பெண்களுக்காக, பெண்களால் உருவாக்கப்பட்ட முதல் வெற்றிகரமான தொழில்நுட்பத் தயாரிப்பு என்று யுவர்ஸ்டோரி உடன் நடைபெற்ற நேர்காணலில் விட்னி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் கூறும்போது,
“வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தளங்கள் அனைத்துமே ஆண்களால் உருவாக்கப்பட்டவை. பெண்களுக்கான சிறந்த உலகை உருவாக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு எந்த ஒரு தளமும் வடிவமைக்கப் படவில்லை. விரைவாக கார் கிடைக்கவேண்டும், ஆண்கள் விரைவாக டேட் செய்யவேண்டும் போன்ற தேவைகளை முன்னிறுத்தியே மற்ற தளங்கள் உருவாக்கப்படுகின்றன. பெண்களை முன்னிறுத்தி எந்த ஒரு தளமும் கட்டமைக்கப்படவில்லை,” என்றார்.
எனவேதான் பெண்களை கருத்தில் கொண்டு இந்த செயலியை உருவாக்கியதாகத் தெரிவிக்கிறார்கள்.
“என்னுடைய சிறு வயதில் நான் எதிர்பார்த்தவற்றையே இன்று உருவாக்கியிருக்கிறேன். இது உண்மையிலேயே பெண்களுக்கான தளம்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷினி | தமிழில்: ஸ்ரீவித்யா