நீங்கள் பிஎஃப் பணம் செலுத்துபவரா? ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
புதிய நடைமுறையானது வரும் நிதியாண்டு முதல்!
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைச் சார்ந்து வேலை செய்பவரா நீங்கள் அப்படியென்றால் உங்கள் பே-ஸ்லிப்பை எடுத்து பாருங்கள். அதில் பிஎஃப், அதாவது வருங்கால வைப்பு நிதிக்கு என்று தனியாக ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும். இந்த வருங்கால வைப்பு நிதியானது ஒரு ஊழியரின் ஓய்வு காலத்திற்காகவும், அல்லது இதர சில அவசர தேவைகளுக்காகவும் சேமிக்கப்படுகிறது.
உண்மையில் இந்த சேமிப்பு திட்டமானது மாத ஊதியம் பெறுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இதில் இன்னொரு வரிச்சலுகை இருப்பது பலரையும் ஈர்க்க முக்கியமான காரணம்.
ஆனால் இப்போது இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டின் அறிவிப்பின்படி, இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாதச்சம்பளதாரர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிக சம்பளம் பெறுபவர்களுக்கான வரிச் சலுகைகள் கிடைப்பது இதன்மூலம் தடுத்து நிறுத்தப்படுகிறது என்றும் விளக்கமளிக்கப்படுகிறது. இருப்பினும் வட்டிவிகிதம் அதிகம், வரிச்சலுகை ஆகியவற்றின் காரணமாக வருங்கால வைப்புநிதியானது சிறந்த முதலீடு திட்டமாகவும், சேமிப்புத் திட்டமாகவும் கருதப்பட்ட நிலையில் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது.
வரி செலுத்தவேண்டியுள்ளதால் சேமிப்பில் பாதிப்பு ஏற்படும். சேமிப்புத் தொகையானது குறையும், அப்படியே சேமித்தாலும் அதிகப்படியான வரி செலுத்த வேண்டியிருக்கும். எப்படி இருந்தாலும், ஓய்வூகாலத்தில் கிடைக்கும் தொகை கணிசமாகக் குறையும்.
இதே போல யூலிப் திட்டத்திற்கும் வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செய்யப்படும் முதலீட்டிற்கு மூலதன ஆதாய வரியும் உண்டு. பங்குகள் கடன் மற்றும் பணச் சந்தையில் முதலீடு செய்யப்படும் இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியம், 2.5 லட்சத்தினை தாண்டினால் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே HNI வாடிக்கையாளர்கள் இதனால் பெரிதும் பாதிகப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய நடைமுறையானது வரும் நிதியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
யாருக்கெல்லாம்பாதிப்பு?
மாதத்திற்கு 20,833 ரூபாய்க்கு மேல் பி.எஃப். பணம் செலுத்துபவர்கள் இந்த புதிய முறையின் மூலம் பாதிப்பை சந்திக்க நேரிடும். ஏனெனில் ஊழியரின் பங்களிப்பு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாயை விட அதிகமாக இருக்கும். அதாவது,
1,73,608 ரூபாய்க்கு மேல் அடிப்படை மாதச் சம்பளம் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஒரு வருடத்தில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பி.எஃப் பங்களிப்பு இருக்கும். எனவே அவர்கள் அந்த கூடுதல் தொகையில் சம்பாதித்த வட்டிக்கு வரி செலுத்துவார்கள்.
எனவே ஊழியர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். சேமிப்புத் திட்டத்தின் மாற்று வழிகளையும் ஒருபுறம் அவர்கள் சிந்திக்க வேண்டியும் அவசியம்.