‘தமிழகத்துக்கு பெருமை’ - கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு அர்ஜூனா விருது!
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஆண்டுத்தோறும் அர்ஜூனா விருது, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான் சந்த் ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2013ம் ஆண்டுக்கான விருதுப்பட்டியலை சமீபத்தில் மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டது.
அதன்படி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று (9.01.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதை வழங்கி கவுரவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு 'அர்ஜுனா விருது' அறிவிக்கப்பட்டது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமைத் தேடி தந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கும் அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். இதில் கூடுதல் சிறப்புவெனில்,
அவரது பயிற்சியாளரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருது வாங்கிய அதே மேடையிலே அதே ஆண்டு மாணவியான வைஷாலியும் விருது பெற்றுள்ளார்.
இவர்களை தவிர, தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டது.
விருதுகள் பெற்ற விளையாட்டு வீரர்களின் பட்டியல்
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது :
கடந்த நான்கு வருட காலப்பகுதியில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பேட்மிண்டன் வீர்ர்களான சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் இருவருக்கும் வழங்கப்பட்டது.
விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது :
தொடர்ந்து சிறந்த பணியை வெளிப்படுத்தியதற்காகவும், சர்வதேச போட்டிகளில் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்து விளங்க பயிற்சியளித்த பயிற்சியாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி. ரமேஷ் (செஸ்), மகாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), ஷிவேந்திர சிங் (ஹாக்கி), ஸ்ரீ கணேஷ் பிரபாகர் தேவ்ரூக்கர் (மல்லாகம்ப்) ஆகிய வீரர்களுக்கும், துரோணாச்சார்யா விருதின் வாழ்நாள் சாதனைக்கான பிரிவில், கோல்ஃப் வீரர் ஜஷ்கிரத் சிங் கிரேவால், கபடி வீரர் பாஸ்கரன், மற்றும் டேபிள் டென்னிஸ் வீரரான ஜெயந்த குமார் புஷிலால் ஆகியோருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது:
மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).
அர்ஜுனா விருது :
ஓஜஸ் பிரவின் (வில்வித்தை) அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை) ஸ்ரீசங்கர் முரளி (தடகளம்) பருல் சவுத்ரி (தடகளம்) முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை) ஆர் வைஷாலி (செஸ்) முகமது ஷமி (கிரிக்கெட்) அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்) திவ்யகிருதி சிங் (குதிரையேற்றம்) திக்ஷா தாகர் (கோல்ப்) கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி )புக்ரம்பம்சுசீலா சானு (ஹாக்கி) பவன் குமார் (கபடி) ரிது நேகி (கபடி) நஸ்ரின் (கோ-கோ) பிங்கி (லான் பவுல்ஸ்) ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சூடு) இஷா சிங் (துப்பாக்கி சூடு) ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்) அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்) சுனில் குமார் (மல்யுத்தம்) ஆன்டிம் பங்கல் (மல்யுத்தம்) நெளரெம் ரோஷிபினா தேவி (வுஷு) ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை) இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்) பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)
தமிழகத்துக்கு பெருமைச்சேர்த்த வைஷாலி!
சென்னையைச் சேர்ந்த வைஷாலி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி. அவரது தந்தை ரமேஷ்பாபு, TNSC வங்கியில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார். அவரது தாயார் நாகலட்சுமி, ஹோம்மேக்கர்.
தனது 12 வயதிலே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவின் செய்திகள் வெளியாகிய போது அவரது சகோதரியும் சதுரங்க வீரர் என்ற பிரக்ஞானந்தாவின் சகோதரி எனும் டேக்-உடனே வெளிச்சத்துக்கு வந்தார். ஆனால், அந்த புனைப்பெயரை கடந்த டிசம்பர் மாதத்தில் உடைத்தெறிந்தார் வைஷாலி. ஏனெனில், கடந்த டிசம்பர் மாதம் கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தி வைஷாலி வெற்றி கண்டார். இதன் மூலம் அவர், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்னர் இந்தியாவின் கோனேரு ஹம்பி,ஹரிகா துரோணவல்லி ஆகியோர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற 84-வது நபர் வைஷாலி ஆவார். அதேவேளையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியலில் வைஷாலி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.
வைஷாலி ஏற்கனவே அவரது சதுரங்கப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ள நிலையில், மற்றொருமாரு அங்கீகாரமாய், அர்ஜூனா விருதை பெற்று தமிழகத்துக்கு புகழ் சேர்த்துள்ளார். இவருடைய சகோதரான பிரக்ஞானந்தா கடந்த ஆண்டிற்கான அர்ஜூனா விருதை பெற்றார்.
வாழ்த்துகள் வீராங்கனையே!